ஐ.பி.எல்.: பெங்களூர் அணியிடம் தோற்றது ராஜஸ்தான் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில், 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்தியுள்ளது.

டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லீவிஸ் 58 ஓட்டங்களையும் ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் சஹால் மற்றும் ஷபாஸ் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் கார்டன் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் ஸ்ரீகர் பராத் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை சாய்த்த யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *