பலவீனமான ஆட்சியாளர்கள் நாட்டில் மீண்டும் ஒரு மதக் கிளர்ச்சியை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் தனக்குள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் நடைபெற்ற முக்கியமான பயங்கரவாத தாக்குதல் ஈஸ்டர் தாக்குதல். இந்த தாக்குதல் முக்கியமாக தற்போதைய ஆளும் கட்சி ஆட்சிக்கு வர உதவியது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இத்தகைய தாக்குதலை உருவாக்கி அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
திறனற்ற ஆட்சியாளர்கள் அத்தகைய மோதலை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் இரத்தக்களரி சதியில் ஈடுபட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகம் எங்களுக்கு உருவாகியுள்ளது. இத்தகைய சந்தேகம் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் இல்லாதபோது இத்தகைய விடயங்களை மக்கள் மறப்பதற்காக மீண்டும் ஏதாவது தாக்குதல் ஏற்படுத்தப்படும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்ற இரத்தக்களரி தாக்குதல் சதிக்கு நம் நாடு மீண்டும் பலியாகி விடக்கூடாது ஆகவே மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.