ரி-20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இழந்தது மே.தீவுகள்: 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, தொடரையும் வென்றுள்ளது.

முல்தானில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பாபர் அசாம் 77 ஓட்டங்களையும் இமாம் உல் அஹக் 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் மற்றும் ஆண்டர்சன் பிலீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 276 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 32.2 ஓவர்கள் நிறைவில் 155 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷமாரா புரூக்ஸ் 42 ஓட்டங்களையும் கெய்ல் மேயர்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் வாசிம் 3 விக்கெட்டுகளையும் சதாப் கான் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் மொஹமட் நவாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *