வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கடமைக்கு இடையூறு- பொலிஸார் கடுமையான எச்சரிக்கை

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஊரெழு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிள் ஒன்றில்  இருவர், தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர்.

இதனால், அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்டபோது, அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார்.

மேலும், அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றமையினால், பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈ.பி.டி.பி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *