மேல் வெடி வைத்து கைது செய்த பிரதேசசபை உறுப்பினர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட  வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட  மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊரெழு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு   பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். 

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டார்.

அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர். 

அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் ,தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

சம்பவம் இடம்பெற்ற இடம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது எனவும் , அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதனால் , சந்தேகநபர்கள் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

கோப்பாய் பொலிஸாரினால் அவர்கள் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதனை அடுத்து அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *