இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! குருநகர் கடற்தொழில் சங்கம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகுகளால் குருநகர் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவை படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில் அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய சம்பவமானது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், படகு உரிமையாளர்களுக்கும் இந்திய அரசினால் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனென்றால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவது ஒருபுறம் அதேபோல் மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது இன்னொரு புறமாக இருக்கிறது.

இந்த நிலையில் எமது மீனவர்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் நிலைமையில் தாக்கி சேதமாக்கப்பட்ட படகினை ஓட முடியாத நிலை காணப்பட்டிருந்தால் அந்த 3 மீனவர்களும் உயிரிழக்க கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும்.

எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை கடற்தொழில் அமைச்சும் அரசாங்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *