கொழும்பு,ஜுன் 27
தற்போது காணப்படும் நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடன்சான்று பத்திரத்தின் படி எரிபொருள் கிடைக்காத நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தாய் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் விநியோகத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு அடுத்த சில மாதங்களுக்குள் முறையான திட்டமொன்றை வகுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.