
கொழும்பு,ஜுன் 30
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைப் பெற இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கான தூதுவர் Julie Chung தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா ஆதரவளிப்பதாக, அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த உயர்மட்ட இராஜாங்க குழு தெரிவித்ததாகவும், Julie Chung இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவும், இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என தாம் நம்புவதாகவும் Julie Chung மேலும் குறிப்பிட்டுள்ளார்.