அழிக்க வேண்டியவை சிறுபான்மையினரின் உடமைகளல்ல; இனவெறுப்பு எண்ணங்களே!

இந்த இக்கட்டான கால கட்டத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை சமூகத்தை மையங் கொண்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் போன்ற இனவெறுப்பு எண்ணங்களை அழிக்க வேண்டுமே தவிர சிறுபான்மையினரின் உடமைகளை அல்ல என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று (02) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கடந்த காலங்களில் அரசியலுக்காக இன, மத வாதங்களையும் வெறுப்புணர்வுகளையும் கையில் ஏந்திய ஞானசார தேரர், ரத்ன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர போன்றவர்களின் உணர்ச்சிவசப் பேச்சுக்களால் தூண்டப்பட்டு முஸ்லிம்களின் உடமைகள், உயிர்கள், பள்ளிகள், வியாபார நிலையங்கள் என பல்லாயிரம் கோடிகள் பெறுமதியான தேசிய சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

அல் குர்ஆன் எரிப்பு, மத்ரசாக்கள் தடை, முஸ்லீம் சமூகசேவை நிறுவனங்கள் தடை, அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், கல்வி மான்களின் கைது, வீண் பழிகள் சுமத்தல், இட்டுக் கட்டல், ஜனாஸாக்கள் எரிப்பு என பல்வேறு வழிகளிலும் திட்டமிட்டு அநியாயமாக முஸ்லிம் சமூகம் துன்புறுத்தப் பட்டார்கள்.

இவ்வாறான இனவெறுப்புச் செயற்பாடுகளின் காரணமாகவே இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு வெளிநாட்டு உதவிகளும் நிறுத்தப் பட்டன.

பாரிய பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் கஸ்டப் படும் இந்த இக்கட்டான நேரத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தனது
இன வெறுப்புக் கருத்துக்கள் கொண்ட பரிந்துரைகளை முன் மொழிந்திருப்பது நாம் கையேந்தியிருக்கும் நாடுகளின் உள்ளங்களை நிச்சயமாக உரசிப்பார்காமல் இருக்காது.

ஆகவே இவ்வாறான இனவெறுப்பு எண்ணங்களை இல்லாமல் செய்து நல்லிணக்கம், இன நல்லுறவுகளை வளர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *