கடற்படை சீருடையை பயன்படுத்தி பெற்றோல் பெற்றவர் கைது

அங்கம்மன,ஜுலை 03

கடற்படை சீருடையினை பயன்படுத்தி 45 லீற்றர் பெற்றோலினை பெற்றுகொண்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.

அங்கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் நாட்கணக்கில் வரிசையில் காத்திருந்து எரிபொருளினை பெற்று கொள்ளும் நிலை காணப்படுகிறது
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பளை-கண்டி வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு கடற்படை சீருடையுடன் வந்து கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்றுக்கு தேவையென கூறி பீப்பாய் ஒன்றில் 45 லீற்றர் பெற்றோலினை பெற்றுகொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் கடற்படை ஒழுக்க விதிமுறைகளை மீறி தன் சொந்த தேவைக்காக சீருடையுடன் வந்து பெற்றோல் பெற்றுகொண்டமை தொடர்பாக தலாத்து ஓயா கடற்படை முகாம் பொறுப்பதிகாரி புவனேக ஆதித்ய விஜேவிக்கிரமவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அவர் கம்பளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *