மலையகத்தில் இன்று (03) அதிகாலை முதல் பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றின் கிளையாறு பெருக்கெடுத்ததன் காரணமாக அட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் 20 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக வீட்டு பொருட்கள், உணவு பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள், கால்நடைகள் என அனைத்தும் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
சில வீடுகளின் கூரைகள் உடைந்து வீடுகள் தொடர்ந்து மழை நீரில் நனைந்த நிலையில் காணப்படுகின்றது.
தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 20 குடும்பம்பங்களும் பாதிக்கப்பட வீடுகளின் ஒரு பகுதியிலும் அயலவர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதில் சில வீடுகள் தொடர்ந்து ஈரலிப்புடன் காணப்படுவதால் அவற்றில் தங்க முடியாது உள்ளமை காரணமாக அவர்கள் மாற்று இடங்களை எதிர்பார்த்துள்ளனர்.
இவர்கள் வளர்த்த கால்நடைகளின் கொட்டில்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பராமரிப்பதிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தமது வாழ்வாதாரமான இந்த கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது என்ற இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு வெள்ளத்தினால் தமது பிள்ளையை பறிக்கொடுத்த தாய் தாம் தொடர்ந்தும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தம்மை யாரும் பார்க்க வருவதில்லை என்றும் தெரிவித்தார்.
கேட்பாரற்று நிர்க்கதியாகியுள்ள இந்த மக்கள் தமது நிலையை யாரிடம் முறையிடுவது யார் தமக்கு உதவி செய்வார்கள் என்றே தெரியாது என மன வேதனையுடன் வாழ்கின்றனர்.





பிற செய்திகள்