யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான 6ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதிரிப்பாகம் ஒன்றினை கொழும்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து அதனை யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் பொதிகள் சேவைகள் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பொதியினை பெற்றுக்கொள்வதற்காக யாழில் உள்ள குறித்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு சென்ற இளைஞன் கொழும்பிலிருந்து தமக்கு வந்த பொதியினை தருமாறு பஸ் நடத்துனரை கேட்டார்.
இதனையடுத்து பஸ் நடத்துனர் பொதியை தேடியபோது குறித்த பொதி மாயமாகியமை தெரியவந்தது.
இந்நிலையில் குறித்த பொதி தொலைத்தமையால் பொதியில் இருந்த பொருளின் விலையை தருமாறு குறித்த இளைஞன் கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதேவேளை தாம் இவர்களின் பொதிகள் சேவைகளை நம்பி கட்டணம் செலுத்தி பொதிகளை அனுப்பும் போது பொறுப்பற்ற விதமாக அவற்றினை தவற விட்டு விட்டு , எந்தவிதமான பொறுப்பும் அற்ற வகையில் தம்மை தகாத வார்த்தைகளால் பேசியமையால் தான் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சகல விதத்தாலும் நாம் நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் எனவும் குறித்த இளைஞன் தெரிவித்தார்.
பிற செய்திகள்