
கொழும்பு,ஜுலை 05
இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்படுவதற்கு ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் ஊழியர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் காணப்படாமை, அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் இன்மை ஆகிய காரணிகளினால் சேவைக்கு சமூகமளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ரயில்வே திணைக்களத்தினால் வழங்கப்படும் எரிபொருள் தமக்கு போதுமானதாக காணப்படவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளின் காரணமாக ரயில்வே திணைக்களத்தின் களஞ்சிய நிலையத்தில் இருந்து எரிபொருள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தமது தனிப்பட்ட வாகனங்களில் சேவைக்கு சமூகமளிக்கும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று(05) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.