அரச – தனியார் பேருந்து சேவையினருக்கிடையிலான பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவு!

அரச – தனியார் பேருந்து சேவையனருக்கிடையிலான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத இடை நடுவில், அரச பேருந்து சாலையினர் வெளியேறியுள்ளனர்.

இன்று காலை எரிபொருள் தருமாறு கோரி அரச பேருந்து சேவையினை முடக்கி, தனியார் பேருந்து சேவையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அரச சபைத் தலைவர் சுப்பையா அமிர்தலிங்கம், உதவி பொது முகாமையாளர் சிறிதரன் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நடைமுறைப்படுத்தல் அதிகாரி, கிளிநொச்சி சாலை முகாமையாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இரு தரப்பினரும் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து, அரச பேருந்து சாலைக்கு கிடைக்கும் ஒவ்வொரு எரிபொருள் தாங்கிய கொள்கலன் வருகை தரும்போதும் 1000 லீட்டர் டீசல் தருவதாக சாலை அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டது.

அதற்கு தனியார் பேருந்து சேவையினர் மறுத்ததுடன், தமது சேவைக்கு அது போதாது எனவும், நாளாந்தம் 1500 லீட்டர் எரிபொருளாவது கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையானது தீர்வின்றி தொடர்ந்த நிலையில், அரச பேருந்து சாலை முகாமையாளர் உள்ளிட்டோர் இடைநடுவில் வெளியேறியிருந்தனர்.

அதன்படி, குறித்த பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவு பெற்றது.

குறித்த சாலை முகாமையாளர் வெளியேறும்போது “பிள்ளை பெற முடியாதவளை பிள்ளை பெற்று தருமாறு கோருவது நியாயமற்றது” என கூறி வெளியேறியமை அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *