யாழில் பொலிஸாரை வம்புக்கு இழுத்த திருடன்!

யாழ் அராலி வடக்கு செட்டியார் மடம் பகுதியில் திருடன் ஒருவன் திருடுவதற்கு வீட்டிற்குள் நுழைந்து விட்டு பொலிசார் துரத்தியதால்தான் வீட்டுக்குள் நுழைந்ததாக பொய் கூறிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இரண்டரை மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து வந்த தம்பதிகள் இருவர் அராலி வடக்கு செட்டியார் மடத்தில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்கு சென்றனர்.

இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திய திருடன் அவர்களது வீட்டுக்குள் நுழைந்தான். வழிபாடு முடித்துவிட்டு தம்பதிகள் இருவரும் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டினுடைய கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு சாத்தப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை வீட்டுக்குள் இருந்த திருடன் வெளியே வந்தான்.

இதனை அவதானித்த தம்பதியினர் “திருடன், திருடன்” என கூச்சலிட்டனர். அதற்குத் திருடன் “நான் திருடன் அல்ல, பொலிசார் என்னை துரத்தி வந்த வேளை வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டேன்” என்றான். தம்பதியினர் மீண்டும் கூச்சலிட்டினர் இதன் போது குறித்த திருடன் வீட்டின் மதல் பாய்ந்து ஓடுவதற்கு முயற்சித்தவேளை அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டான்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வேளை தான் திருடுவதற்கு வந்ததை ஒப்புக்கொண்டான்.

வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் குறித்த திருடன் அளவெட்டி தெற்கு, அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவன் என்றும் கொலை சம்பவம் ஒன்றில் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளவன் என்றும் தெரியவந்துள்ளது. திருடனை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த வீட்டில் பொருட்கள் எவையும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *