
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரே அடுத்த பிரதராகப் பொறுப்பேற்பார்.
அந்த வகையில், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கிறார். தற்போது புதிதாக இந்தப் போட்டியில் இணைந்துள்ள வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சுகாதார மற்றும் சமூக நலக் குழு துணைத் தலைவர் ஜெரிமி ஹன்ட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
போட்டியாளர்கள் நாடாளுமன்ற ஆதரவு வீதம்!
ரிஷி சுனக் 29/358 (8 சதவீதம்)
பென்னி மார்டன்ட் 20/358 (6 சதவீதம்)
ஜெரிமி ஹன்ட் 13/358 (4 சதவீதம்)
கெமி பேடனாக் 12/358 (3 சதவீதம்)
டாம் டுகென்தாட் 11/358 (3 சதவீதம்)
நாதிம் ஸஹாவி 11/358 (3 சதவீதம்)
சூவெல்லா பிரேவர்மன் 10/358 (3 சதவீதம்)
சஜித் ஜாவித் 8/358 (2 சதவீதம்)
கிரான்ட் ஷாப்ஸ் 7/358 (2 சதவீதம்)
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தனது பிரதமர் பதவியையும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியையும் கடந்த வியாழக்கிழமை இராஜிநாமா செய்தார்.