சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் தாம் கூறிய உண்மைகள் மற்றும் யோசனைகளை பிரபல ஊடகம் ஒன்று தவறாக பிரசாரம் செய்ததன் காரணமாகவே தனது தனிப்பட்ட வீடு எரிந்து சாம்பலாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
போராட்ட தினத்தன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதில் பெரும்பான்மையான கட்சித் தலைவர்களும் கட்சிப் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர்.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபாநாயகர் ஊடாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இங்கு மூன்று மாற்று யோசனைகளை நான் முன்வைத்தேன். அதன் மூன்றாவது யோசனை, ஜனாதிபதியும் பிரதமரும் இராஜினாமா செய்து நாடாளுமன்றத்தின் பிரதிநிதி ஒருவரை பதில் ஜனாதிபதியாக நியமித்து புதிய பிரதமரை சர்வகட்சி இணக்கப்பாட்டின் ஊடாக நியமித்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி வழங்குவதே கடைசி தெரிவாகும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பகுதியை சபாநாயகர் உரிய முறையில் அறிவிக்கவில்லை.
இதனால் நான் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் தவறான தகவலை வெளியிட்டமையினால் எனது வீடு தீ வைத்து அழிக்கப்பட்டது.
இது தொடர்பில் சபாநாயகரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளேன்.
நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்தின் போது எனது வீடு முற்றாக எரிக்கப்பட்டதுடன், ஐயாயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் வீட்டில் இருந்த தளபாடங்களும் எரிக்கப்பட்டன என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ய விரும்பவில்லை என பிரதமர் அறிவித்திருந்தார் என பிரபல தொலைகாட்சி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதேவேளை பிரதமரின் தனிப்பட்ட வீட்டுக்கு அருகாமையில் எந்தவொரு ஆர்ப்பாட்டக்காரர்களும் இல்லாத நிலையில், அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் இராணுவத்தினருடன் முரண்பட்டதுடன், கடுமையாக தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்