புத்தளம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வந்த தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் மூன்று நாட்களின் பின்னர் இன்று (13) புதன்கிழமையுடன் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த (06) பொதுநிருவாக அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு தேவையான எரிபொருள் வழங்க கோரியுமே சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்படி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து வரும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எரிபொருள் இன்றி சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதனால் அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இதற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, நடு முழுவதும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த திங்கட்கிழமை (11) முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்தில் கொள்ளாமல் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக காலம், நேரம் பாராமல் வங்கி மற்றும் கிராமங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் பிரச்சினை இருப்பதாக சுட்டிக்காட்டிய புத்தளம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களை மலினப்படுத்தும் வகையில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தீர்மானம் பொதுமக்களை பழிவாங்கும் நோக்கம் அல்ல என்றும், தமக்கு தேவையான எரிபொருளை கோருவதே நோக்கமாகும் எனவும் தெரிவித்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய நாளை முதல் பணிக்குச் செல்ல தீர்மானித்துள்ளனர்.
மகளிர் , சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கும், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளன.
மேற்படி கலந்துரையாடலில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளை அத்தியாவசிய கடமைகளாக கருத வேண்டும். அவர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை வேண்டும் எனவும் அதுபற்றி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் , பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் மேற்படி கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்து எழுத்து மூலம் தமக்கு வழங்க வேண்டும் எனவும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய எரிபொருளை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் செயற்படாத பட்சத்தில் மீண்டும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பார்கள் எனவும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதுபற்றி எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கிய மகளிர் , சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் , பேற்படி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.