சிறையில் கைதிகள் துஷ்பிரயோகம்: விசாரணைகள் தொடர்கின்றன !!

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் கடந்த செப்டம்பரில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அரசின் பராமரிப்பில் கைதிகளை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வது அடிக்கடி நிகழ்கிறது என்றும் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

மேலும் ​​கைதிகளின் உரிமை மீறல்கள் தொடர்பான கடந்த கால விசாரணைகள் பக்கச்சார்பானவை என கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சேனக பெரேரா குற்றம் சாட்டினார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் மெதுவான முன்னேற்றம் அண்மையில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் தாக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறனது.

இருப்பினும் குறித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதை சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன உறுதிப்படுத்தியுள்ளன.

துரதிருஷ்டவசமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு சாதாரண ஆணைக்குழு என்பதனால் சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்யவோ அல்லது தண்டிக்கவோ மட்டுமே பரிந்துரைக்க முடியும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அநுராதபுரம்மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட கிட்டத்தட்ட 40 பேர் விசாரிக்கப்பட்டதாகவும் இதன் இறுதி அறிக்கை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சுயாதீனமாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *