
இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர இன்று காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1953 மார்ச் 01ஆம் திகதி பிறந்த அவர் தனது 68ஆவது வயதில் இன்று (18) காலமானார்.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவர், வர்ணனையாளராகவும் செயற்பட்டு வந்தார்.
சிறந்த உபாயங்களைக் கையாண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் வலு கை துடுப்பாட்ட வீரரான அவர், மித வேக வலது கை பந்துவீச்சாளராகவும் செயற்பட்டார்.
1975 – 1982 காலப் பகுதியில் 4 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், 12 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை வகித்த..
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்..
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக..
முதலாவது பந்தை எதிர்கொண்ட..
முதலாவது ஓட்டத்தை குவித்த வீரராக பந்துல வர்ணபுர தனது பெயரை பதித்துள்ளார்.
அவர் தலைமை வகித்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எவ்வித வெற்றியையும் ஈட்டிக் கொடுக்க முடியாத போதிலும், அவர் தலைமை வகித்த ஒரு நாள் சர்வதேச போட்டியிலேயே இலங்கை அணி முதலாவது வெற்றியை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியில், அவர் அரைச் சதத்தை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






