புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி தில்லயடி மற்றும் கண்டக்குழி ஆகிய கடற்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 740 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்தோடு இதுதொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரின் கீழ் இயங்கும் மெரின் பலசேனா அதிகாரிகள் குறித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (20) விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த கடற்பிரதேசத்தை அண்டிய பகுதியில் நபர் ஒருவர் சில மூடைகளை கெப் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த போது அங்கு சென்ற கடற்படையினர் குறித்த வாகனத்தை சோதனையிட்டனர்.
மேலும் குறித்த மூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அந்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.
அத்தோடு 19 மூடைகளில் அடைக்கப்பட்ட 640 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் இதன்போது கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கற்பிட்டி கண்டக்குழி பகுதியில் கடற்படையினர் மற்றுமொரு சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, கண்டக்குழி கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மூன்று உர மூடைகளை கடற்படையினர் சோதனை செய்த போது அதில் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று மூடைகளிலும் 100 கிலோ கிராம் எடையுள்ள மஞ்சள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த மஞ்சள் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் நோக்கில் குறித்த மஞ்சள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கற்பிட்டி தில்லயடி பகுதியில் மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கெப் வாகனமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்துடன் கண்டக்குழி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கடலில் மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கற்பிட்டி , புத்தளம் ஆகிய பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேற்று முன்தினம் (20) வரையிலான காலப்பகுதியில் 8770 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 இந்தியர்கள் உட்பட 17 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







