இலங்கையில் முதன்முறையாக ஒரு சூலில் 6 குழந்தைகளை தாயொருவர் பிரசவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி காலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த பிரசம் நடந்தது.
3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன.
அதிகாலை 12.16 மணிக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. மற்ற ஐந்து குழந்தைகளும் 12.17 முதல் 12.18 வரையான காலப்பகுதியில் சிசேரியன் மூலம் பிரசவமாகின.
முதல் குழந்தை 1 கிலோ 600 கிராம் எடை கொண்டது. கடைசி குழந்தையின் எடை 830 கிராம் எடைகொண்டது. குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை மட்டுமே மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது.
குழந்தைகளை பிரசவித்த 30 வயதுடைய திலினி வாசனா வவுனியாவை சேர்ந்தவர். தற்போது அங்கொட பகுதியில் வசிக்கிறார். தந்தை பிரபாத் உதயங்க பொறியிலாளர் எனத் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் குழந்தைகளின் தந்தை தெரிவிக்கையில்,
எங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்த்தோம்.
ஆனால், ஒரே நேரத்தில் ஆறு குழந்தைகளைப் பெறப் போகிறேன் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதேசமயம், நான் அதிர்ச்சியுமடைந்தேன்.
வைத்தியர் திரான் டயஸை சந்தித்த பிறகுதான், இலங்கையில் இதற்கு முன்பு ஆறு குழந்தைகள் ஒரே சூலில் பிறக்கவில்லை என்பது எனக்குத் தெரிய வந்தது.
பிரசவத்துக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் மனைவி ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை நம்பிக்கையூட்டி பிரசவத்திற்கு தயார் செய்தனர்.
மருத்துவமனை எங்களுக்காக உபகரணங்கள் உட்பட அனைத்தையும் தயார் செய்தது.
பிரசவத்தின்போது நான் என் மனைவியுடன் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் கழித்து, குழந்தைகளைப் பார்க்கவும் என் மனைவியுடன் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
31 வாரங்களாக என் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன். எனது குழந்தைகள் நாட்டின் நல்ல குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் அதற்கு முழு கடமைப்பட்டுள்ளேன். இந்த மருத்துவர்கள் எனக்கு கடவுளைப் போன்றவர்கள். இந்த ஊழியர்களுக்கு நன்றி. எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் திரான் டயஸ் தெரிவிக்கையில்,
10 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது இந்த அம்மா என்னிடம் வந்தார். நான் இலங்கையில் இதற்கு முன்பு ஆறு இரட்டையர்களைப் பிரசவிக்க சிகிச்சையளித்துள்ளேன்.
ஆனால், 6 குழந்தைகளை பிரசவிக்க இப்போதுதான் சிகிச்சையளித்துள்ளேன். மூன்று குழந்தைகளுக்கு மேல் கருத்தரிப்பதில் சில ஆபத்து உள்ளது. பிறப்பு பொதுவாக 38 வாரங்களில் இருக்கும். 36 முதல் 37 வாரங்களுக்குள் இரண்டு குழந்தைகளும், 35 வாரங்களில் மூன்று குழந்தைகளும் பிறக்க வேண்டும். 6 குழந்தைகள் பிறக்க வேண்டிய வாரங்களின் எண்ணிக்கை எங்கும் காணப்படவில்லை.
எனவே, இதுவரையான எங்களுடைய அனைத்து அறிவு மற்றும் அனுபவத்துடன், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பிரசவ நேரத்தை நாங்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது.
இந்த தாய்க்கு 27 வாரங்களில் உயர் இரத்த அழுத்தம் இருந்தது. நான் அவரை பிசியோதெரபிஸ்ட் பிரியங்கர ஜெயவர்த்தனவிடம் பரிந்துரைத்தேன். அந்த நிலைக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் முடிந்தவரை அவரது கர்ப்பத்தை நீடிக்க முயற்சித்தேன்.
கடைசி காலத்தில், இரண்டு குழந்தைகளுக்கான இரத்த வழங்கல் குறைக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு தினசரி ஸ்கான் செய்யப்பட்டது. இறுதியாக 31 வாரங்களில் குழந்தை பிரசவம் இடம்பெற்றது என்றார்.
அத்துடன், கொரோனாத் தொற்றுநோய் காரணமாக திலினிக்கு கர்ப்ப காலத்தில் இரண்டு பைஸர் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், ஒரு குழந்தைக்கு ஒரு மருத்துவர் மற்றும் மூன்று தாதியர்கள் என்ற அடிப்படையில் மருத்துவ குழு தயார்படுத்தப்பட்டு, 40 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவ மற்றும் தாதியர்களின் பங்கேற்புடன் பிரசவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







