மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் இன்று காலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டு. கல்லடி விபுலானந்த இசை நடன பல்கலைக்கழகத்துக்கு முன்னால் உள்ள வீதியில் வாகனம் திரும்பும் வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பும் போது, அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதிய பஸ் சிறிது தூரம் இழுத்துச்சென்றதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் முழுமையாக சேதடைந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சாரதியைக் கைது செய்ததுடன், பேருந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







