வல்வெட்டி. மீனவர்களை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது தமிழரசுக் கட்சியே.! மறவன்புலவு சச்சிதானந்தன்

வல்வெட்டித்துறைச் சைவ மீனவர்களை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது தமிழரசுக் கட்சியே என மறவன்புலவு சச்சிதானந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கடற்கரையில் யாழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறை மீனவர் இருவர் தமிழகக் கரையோரத்தில் மீன் பிடித்த நிலையில், அதில் இந்திய கடலோர காவல்படை தலையிட்டு தமிழகக் காவல்துறை நீதிமன்றத்தில் முன்பு நிறுத்தியது.

அதன்பின், கைதான இரு மீன்வர்களையும் சென்னையிலே புழல் சிறையில் இருவரையும் அடைத்தார்கள்.

கொடுமையிலும் கொடுமை. தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களுக்குச் செய்த வரலாற்றுக் கொடுமை

தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையேயான அன்பு எல்லையை அருள் எல்லையை ஆதரவு எல்லையை ஒத்துழைப்பு எல்லையைப் பகை எல்லையாக மாற்றிய தமிழரசுக் கட்சியைக் கண்டிக்கிறேன்.

தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் மோதும் சூழ்நிலைக்கான சூழ்ச்சியின் கைப்பாவைகளாகத் தமிழரசுக்கட்சியினர் மாறி உள்ளார்கள்.

முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை மீனவர்கள் போராட்டம் நடத்தி இருந்தால் இந்தியா பொருட்படுத்தி இருக்காது.

போராட்டத்துக்கு அழைக்கும் விளம்பரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பதாகக் கூறினர்.

பின்பு தமிழரசுக் கட்சி நடத்துவதாக கூறினர். தலைவர் மாவை சேனாதிராஜா வாழ்த்துவதாக கூறினர். இச்செய்திகளைப் பார்த்து நான் கண்ணீர் விட்டேன்.

மீனவர்களுக்கிடையே குழு மோதல்கள் உண்டு. குடும்ப மோதல்கள் உண்டு. எல்லை மோதல்கள் உண்டு. உலகெங்கும் வாழ்கின்ற மீனவர்களிடையே இது வழமை. அவை கட்சி அரசியல் ஆவதில்லை.

தமிழக அரசியல்வாதிகளின் வீட்டுப் படிகளில் தவமிருந்த தமிழரசுக் கட்சியின் தலைமை, இந்திய அரசு அலுவலகங்களிலும் அரசியல்வாதிகள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் படிகளில் தவம் இருக்கின்ற தமிழரசுக் கட்சித் தலைமை, ஈழத் தமிழ் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டி வேடிக்கை பார்த்து வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவரைப் புழல் சிறையில் அடைத்துள்ளது.

தெற்கே குமரிப் பரப்பில் wadge bankஇல் இருந்து வடக்கே விசாகப்பட்டினம் வரை நீண்டு அகன்ற கடற்பரப்பில் இந்திய எல்லைக்குள் சென்று மீன்பிடிக்காத (பல நாள் கடலில் தங்கும் படகு வைத்திருக்கும் mdft) இலங்கை மீனவர்களைச் சுட்டிக் காட்ட முடியுமா?

கோட்டைப்பட்டினத்தில் இறந்த மீனவருக்குப் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியது தமிழக அரசு.

புழல் சிறையில் இருக்கும் ஈழ மீனவர் குடும்பங்களுக்குத் தமிழரசுக் கட்சி எவ்வளவு தொகையை இழப்பீடாக வழங்கப் போகிறது?

வடக்கு மாகாணத்தின் 75,000 மீனவர்களின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தம் தலையில் தாமே கொள்ளி வைக்கும் தமிழரசுக்கட்சியின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply