மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் பாடசாலை மாணவன் கைது!

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி  பகுதியில்  ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த  17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த குறித்த 17 வயது பாடசாலை மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார,உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க உப பொலிஸ் பரிசோதகர் வணசிங்க தலைமையிலான  குழுவினர் மேற்பட்ட கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு,குறித்த மாணவனையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை இராணுவ புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை மதியம் மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து  1 கிலோ 665 கிராம்,கேரள கஞ்சா போதைப்பொருளை தம்வசம்  , வைத்திருந்த மற்றும் கொண்டு சென்ற குற்றத்தில் புத்தளத்தில் வசிக்கும் 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply