திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாப்பதற்கு உதவுங்கள்: ஆறு.திருமுருகன் அவசர வேண்டுகோள்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் திருத்தலத்தைப் பாதுகாப்பதற்கு உதவுங்கள் என அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும் செஞ்சொற்செல்வருமான கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதமரிடமும், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு இன்று திங்கட்கிழமை(08.8.2022) மதியம் மின் அஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆலயத்திற்குச் செல்லும் வழியில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவசர அவசரமாக வீதியின் இரு மருங்கிலும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் எந்த உத்தரவுமின்றி தற்காலிக கடைகள் அமைத்தனர். அக் கடைகள் தற்போது 58 ஆக அதிகரித்து விட்டது. இக் கடைகள் அமைப்பவர்களுக்கும், திருக்கோணேஸ்வரக் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

திட்டமிட்டு ஆலயச் சூழலை ஆக்கிரமிப்பது போல் இக் கடைகள் அமைக்கப்ப்பட்டன. இதுதொடர்பாகத் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகம் பல இடங்களிலும் புகார் செய்த போதிலும் எவ்வித பலனும் கிட்டவில்லை.

தற்போது திருக்கோணேஸ்வரம் செல்லும் பாதைக்கு அருகில் கோவில் சமதரையில் இவர்களுக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கத் தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது.

03.8.2022 தொல்லியல் திணைக்களத்தினால் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகசபைத் தலைவரும், செயலாளரும் அழைக்கப்பட்டுத் தெருவோரம் வர்த்தகம் செய்வோருக்கு கோவிலுக்குச் சமீபமாக நிரந்தரக் கட்டடம் அமைக்கத் தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளதாகவும், அதற்கு ஆலயம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாகத் தொல்லியல் திணைக்களம் கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணி வேலைகளைத் தடுத்து வருவதை அனைவரும் அறிவர். தேரோடும் வீதியை அகலிக்கத் தடுத்தனர். அழிந்துபோன அன்னதான மடத்தை விஸ்தரிக்கத் தடுத்தனர். வாசலில் பெருங்கோபுரம் கட்டுவதற்குத் திணைக்களம் இடையூறுகளை விளைவித்து வருகிறது. தற்போது
இந்திய அரசாங்கத்திடம் திருக்கோணேஸ்வரத்தின் பாரிய திருப்பணி வேலைகளை நிறைவேற்றித் தருமாறு ஆலய அறங்காவலர் சபையும், இந்துசமய நிறுவனங்களும் வேண்டுதல் விடுத்து அவை சாதகமாக அமைய உள்ள நேரத்தில் திட்டமிட்டு ஆலயச் சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தரக் கடைகளைக் கட்டுவதற்கு முன்வந்துள்ளனர்.

இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கும், அதேவேளையில் அங்கு அவசரமாகக் கட்டப்பட உள்ள வாணிபக் கட்டடங்களைத் தடுத்து நிறுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயச் சுற்றாடலில் வேற்று மாதங்களுக்கான கட்டட நிர்மாணப் பணிகள் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணியை மட்டும் தொல்லியல் திணைக்களம் தலையீடு செய்து திருப்பணிகளைத் தடுத்து வருகிறார்கள். இந்துசமயத்தவர்களுக்கும், தமிழினத்திற்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

திருக்கோணேஸ்வரம் இந்திய மக்களுடனும் தொடர்புடைய கோயில். இந்திய அரசாங்கமும், திருக்கோணேஸ்வரர் திருப்பணி தொடர்பாக விரைவில் செயற்படுவதற்கு கெளரவ பிரதமரும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதிகள் இந்தியப் பிரதமர், இந்தியத் தூதுவர்- கொழும்பு, யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பொதுவான வேண்டுகோளாகவும் விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *