
இலங்கைப் நாடாளுமன்றம் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முற்றாக நிராகரிப்பதுடன் அதற்குப் பதிலாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டுமீறிய அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கு ஏதுவான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 22 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் போதுமான உறுதிப்படுத்தலை வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக அமைந்த முறையற்ற நிர்வாகம் மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்குரிய பொறுப்புக்கூறலையே இலங்கை மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் அரசியலமைப்பு ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை என்பதுடன் அது ஜனாதிபதி வசமுள்ள மிகையான அதிகாரங்களை குறைக்கவில்லை.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறிப்பிடத்தக்களவிலான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையவில்லை.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுமீறிய அதிகாரங்கள் நீக்கப்படவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியபோதிலும், 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின்படி ஜனாதிபதி இன்னமும் மிகையான அதிகாரங்களைத் தன்னகத்தே வைத்திருக்கின்றார்.
குறிப்பாக அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அரசியலமைப்புப்பேரவையைப் பொறுத்தமட்டில், அதற்குரிய பெரும்பான்மை உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அத்தகைய பேரவையை சுயாதீனமானதாகவோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்குரிய தகுதிவாய்ந்த கட்டமைப்பாகவோ கருதமுடியாது.
தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையானது நாட்டின் பொருளாதாரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பேராபத்து என்பது நிரூபணமாகியிருப்பதுடன் இக்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
இருப்பினும் துரதிஷ்டவசமாக முன்மொழியப்பட்டிருக்கும் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அதனைச் செய்வதற்குரிய போதிய இயலுமையைக் கொண்டதாக அமையவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிற செய்திகள்