அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரவு செலவு திட்டத்திற்கு ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் பொதுமக்களுடன் இணைந்து இன்றைய தினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பொகவந்தலாவை நகரில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் ,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






