ரணிலுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார்!

பயனளிக்கும் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த நான் தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று(19) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.

மேலும் அரசு கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும். ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன்.

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை. தற்போது அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப பதவிகள் அவசியமில்லை”என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *