
ஹோட்டன்தன்ன தேசிய சரணாலய பகுதியில், மரைகள் மரணிப்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹோட்டன்தன்ன தேசிய சரணாலய பகுதியில், நடமாடும் மரைகளின் மரணத்திற்கு வேட்டை நாய்களே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
வேட்டைக்காரர்கள் மரணித்த பின்னர் அவர்கள் வளர்த்த வேட்டை நாய்கள் காடுகளில் வாழ்வதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
ஹோட்டன்தன்ன தேசிய சரணாலய பகுதியில், நடமாடும் மரை உள்ளிட்ட விலங்குகள் அம்பேவல நீர்த்தேக்கத்திற்கு நீர் அருந்த செல்லும்போது, குறித்த வேட்டை நாய்கள் அவற்றை வேட்டையாடும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சில மரைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அந்த வனபகுதியில் உள்ள வேட்டை நாய்களை பிடிப்பதற்காக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வேட்டை நாய்களை பிடிப்பதன் மூலம் மரை உள்ளிட்ட ஏனைய மிருகங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்க்க முடியும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நானுஓயா, அம்பேவல நீர்த்தேக்கத்தில் உயிரிழந்த மரைகள் சிலவற்றின் உடல்கள் மிதந்திருப்பதை அவதானித்த மீனவர்கள் அது தொடர்பில், வனவிலங்கு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அந்த மரைகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்