இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களினதும் உரிமைகளையும் பாதுகாக்கும் பயனுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் புலம்பெயர் குழுக்களுடன் இணைந்து பயணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள, ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி ஆகியோருடன் வியாழக்கிழமை (18) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி,
‘இந்தக் கலந்துரையாடலில், இலங்கையில் சுகாதார நிலைமை, கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் பயனுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார்.
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் புலம் பெயர் குழுக்களுடன் இணைந்து பயணிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் அவர் வெளிப்படுத்தினார்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் தனது டுவிட்டர் பதிவில்,
‘இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஐ.நா.வின் ஆதரவு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினோம்.
சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் அனர்த்தங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளல் ஆகியவற்றில் ஐ.நா.வின் ஒருங்கிணைந்த அவசர உதவி மற்றும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐ.நா. உறுதிபூண்டுள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்





