கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது-கல்முனையில் சம்பவம்!

கல்முனை மா நகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருடன் சந்தேக நபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்துவந்த கல்முனைகுடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதான அப்துல் ஜப்பார் முகமட் றிஸ்வான் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் இக்கைது இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ தினமன்று விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று குறித்த போதை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபரை கல்முனை அம்மன் கோவில் வீதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வியாபாரி என விசாரணையின் போது தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 4 கிராம் 42 மில்லி கிராம் உட்பட கேரளா கஞ்சா 765 கிராமும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *