ஹம்பாந்தோட்டையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சீன உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ விவகாரம் தொடர்பில் இலங்கையின் நிலையை இந்தியா புரிந்து கொள்ளும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தியர்களை இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வரவழைக்கும் நோக்கில் ஆமதாபாத் சென்றுள்ள அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘
இலங்கை ஒரு சிறிய நாடு, ஒவ்வொரு நாட்டுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. எங்கள் நிலைமையை இந்தியா நிச்சயம் புரிந்து கொள்ளும்.

இந்தியாவுடன் எங்களுக்கு சிறந்த தூதரக உறவுகள் உள்ளன. இலங்கையில் சீனர்களின் முதலீடுகள் அதிகம் என்பதுடன், கடந்த காலங்களில் எங்கள் தேவைகள் குறித்தும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். னவே இது ஒரு பெரிய ராஜதந்திர பிரச்சினை இல்லை என்று நம்புவதாகவும் கூறினார்.
இதேவேளை தமது எதிர்ப்பையும் மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டமை இந்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் இருந்து 750 மைல் தொலைவில் உள்ள தகவல்களை துல்லியமாக சேகரிக்கலாம் என்பதால் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் அதிக கரிசனை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தென்னிந்திய கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள இந்தியா தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
பிற செய்திகள்