நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில், தேவாலயம் மற்றும் தபாலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று திங்கட்கிழமை இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட கிறிஸ்தவ சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆலயத்தின் முன்பகுதியில் இருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
அப் பிரதேச மக்கள், லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பின், குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமயலறைக்கு சென்ற பொழுது, அங்கிருந்த 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.