ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அறவிடுவதில் அரசியல் தலையீடு கிடையாது!

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அறவிடும் நபர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகள் காணப்படாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

காலி – முகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’ என்ற தொனிப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட தளத்தில் 49 இலட்சத்திற்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நஷ்டஈட்டை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்குபற்றியிருந்த நிலையில், அவர்களில் யாரிடமிருந்து நஷ்ட ஈட்டு தொகையை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர், மேலும் குறிப்பிடுகையில்,

இது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் போராட்டத்தினால் குறித்த பகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதம், தெரிவு செய்யப்படும் நபர்கள் என்பன தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படும்.

அதன் பின்னர் நீதிமன்றத்தினால் குறித்த நபர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டால் மாத்திரமே அவர்களிடமிருந்து நஷ்டஈட்டுத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவே சட்ட நடைமுறையாகும். அதற்கு முரணாக இவ்விடயத்தில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் காணப்படாது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *