கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?

இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனினும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கொரோனாப் பாதிப்புக்களாகவே அடையாளம்காணப்பட்டன எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய கவனம் செலுத்தப்படாமல் பல சமூகக்கூட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் பரவினால், இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது எமது தொழிற்சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *