ஜெனிவா நாடகங்களை அரங்கேற்றுவதனை நிறுத்த வேண்டும்- உமாச்சந்திரா பிரகாஷ் வலியுறுத்து!

ஜெனிவா கூட்டத் தொடரினை இலக்கு வைத்து நாடகங்களை அரங்கேற்றுவதனை நிறுத்தி விட்டு . தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் .யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறலை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்திருந்தார் .

யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

இலங்கையின் நிலைமை மீண்டும் ஓரளவிற்கு மீண்டு விட்டதாக தற்போதைய அரசும் ,புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் காட்டுகின்ற ஒரு படம் மக்களை சென்றடையவில்லை ,மக்களுக்கான தீர்வும் கிடைக்கவில்லை.

தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணை இல்லாத ஒரு தலைவர். பொதுஜன பெரமுனவின் நிழல் அரசியல் தலைவராக செயற்பட்டுக்கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மக்கள் நலம் சார்ந்த பொருளாதார திட்டங்களுக்கு மீட்சி கொடுப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தாலும் மண்ணெண்ணெய் விலையேற்றத்தினால் நாட்டில் உள்ள மீனவ ,விவசாயிகளுடைய வயிற்றில் அடித்த தலைவராக வரலாற்றில் பதிவாகிறார். 75% சதவீத மின்சார அதிகரிப்பு என்பது நிறுவனங்கள் ,அமைப்புக்களிடமிருந்து கோடிக்கணக்காக சுருட்டியவர்களுக்கு இது இலகுவான ஒன்றாகும் .இவை சாமானிய மக்களை எவ்வாறு சமாளிக்க வைக்க போகிறது. இவை இன்னும் நாட்டினை அதால பாதாளத்திற்கு கொண்டு செல்லப் போகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை ஒழிக்க வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலை ,காணி விடுவிப்பு,சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாடுதல் ,அவசரகால நிலைமை போன்ற விடயங்களை ஜெனிவா கூட்டத் தொடரினை இலக்கு வைத்து இந்த அரசு பேசுகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி உடனடியாக ஒரு தீர்வினை பெருத் தருவாரா? ”காலத்துக்கு காலம் கிடைக்கக்கூடிய பழங்கள்” போன்று வெறுமனே ஜெனிவா கூட்டத் தொடரை பயன்படுத்துகிறாரா? என்ற குற்றச்சாட்டினை முன் வைக்கிறேன்.

பொருளாதார ரீதியிலான வீழ்ச்சி ,பொருட்களின் அதிகரித்த விலை ஆகியவற்றினால் தென்னிலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதனால் ஆட்சி மாற்றம் உருவாகியது.தற்போது பல பொருட்களை 20 ரூபா ,10 ரூபா குறைத்து விட்டதாக ஒரு நாடகங்களை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள்.ராஜபக்ஷக்களின் காவலாளிகளாகவே ரணில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.இது கண்டனத்திற்குரிய விடயமாகும்.

ஜனநாயக ரீதியாக மக்கள் குரல்களாக ஒலிக்கின்றவர்களை குரல் வளையை நசுக்க முற்படுகிறார்கள்.எனவே போராட்டங்களை இவ்வாறு ஒடுக்குவதானாலும், கைது செய்வதானாலும் போராட்டங்கள் நிறைவுக்கு வந்து விடும் என இந்த அரசு பகல் கனவு காண்கிறது .ஆனால் போராட்டத்தினை அடக்க அடக்க மக்கள் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறான சில்லறை விடயங்களை கைவிட்டு இலங்கை முழுவதுமாக இருக்கக்கூடிய இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ,வடக்கு ,கிழக்கு பகுதியில் தமிழர்கள் நிலம் சார்ந்து ,தமிழர் உரிமை சார்ந்து பல பிரச்சனைகள் இருக்கின்றது இத்தனையும் அரசு கவனத்தை கொள்ள வேண்டும்.

வெறுமனே ஜெனிவா கூட்டத் தொடரினை இலக்கு வைத்து நாடகங்களை அரங்கேற்றுவதனை நிறுத்த வேண்டும் .நிலையான தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் .யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறலை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றோம்.

மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளை தேசிய ரீதியாக ,சர்வதேச ரீதியாக கொண்டு செல்வதைக்கூட ஜனநாயக ரீதியாக முடக்குகின்ற ஒரு அரசாக ரணில் விக்கிரமசிங்க அரசை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *