
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பலாங்கொட காஷ்யப்ப தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காஷ்யப்ப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட நால்வர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மற்றும் நளீன் குணவர்தன ஆகியோரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.