
கொழும்பு,ஓக 24
மக்களின் அழுத்தமே அரசாங்கத்திற்கு பயங்கரவாதமாக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக அமைப்பு மாற்றத்தினை கோரிய இளைஞர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் அமைச்சுப் பொருப்புகளை வழங்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அதனை பயங்கரவாதமாக கருதுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நிபந்தனையின்றி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கியவர்களை கைது செய்துவரும் அரசாங்கத்தின் அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.