
கொழும்பு,ஓக 24
தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களில் ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிணங்க இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடனான கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்எம் ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற முதல் வாரத்தில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விடுத்திருந்த பணிப்புரைக்கு இணங்க இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலிலேயே இது தொடர்பில் ஆராயப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து 6 அமைப்புக்களின் தடையை நீக்குவது தொடர்பில் பல்வேறு விடயங்களை கலந்துரையாடி அதற்கான மேலதிக நடவடிக்கைகளை பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டனர்.
மேலும், தடையை நீக்கவுள்ள ஆறு அமைப்புக்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் துரித கதியில் தடைநீக்க அறிவிப்பை வெளியிட பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்எம்எம் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ், அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீக்கத்துக்கான நியாயப்பாடுகள் தொடர்பில் விளக்கத்தை முன்வைத்திருந்தனர்.