ஒரு வருடத்துக்குள் உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை: பிரசன்ன

கொழும்பு,ஓக 24

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினால் வீடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை கூறினார்.

அந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் தீர்த்து வைக்குமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பில் தேவைப்படின் கட்டளைச் சட்டங்களை திருத்துமாறு மேலும் அறிவுறுத்தினார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படாத வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில், அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப்பத்திரங்களை வழங்குவது துரிதப்படுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பட்டா பெறாத அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக 11 பேர் கொண்ட குழுவையும் ஜனாதிபதியின் செயலாளர் நியமித்துள்ளார்.

இதுவரை உரிமப்பத்திரம் பெறாத அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளுக்கு உரிமைப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காக 11 பேர் கொண்ட குழுவையும் ஜனாதிபதியின் செயலாளர் நியமித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயற்படுத்தும் முக்கிய நிறுவனங்களான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள  நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை  ஆகும்.

இந்த மூன்று நிறுவனங்களாலும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 32,933 ஆகும்.

இதுவரை 10,625 வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டுமே உரிமைப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டிய உரிமைப் பத்திரங்களின் எண்ணிக்கை 22,308 என இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 1,326 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன்  அதில் 545 பயனாளிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 14,607 ஆகும். அந்த வீடுகளில் சுமார் 12,000 குடும்பங்கள் குடியேறியுள்ளன.

ஏறக்குறைய 80 பேருக்கு உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும்  வீடு கூட்டு ஆதனம் என்பதால், அனுமதி கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இங்கு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன தெரிவிக்கும்போது சுமார் 8 வருடங்களாக கூட்டு ஆதனம் தொடர்பான சட்ட மூலம் திருத்தப்படுவதற்கான  முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.  அதற்காக  நீதி அமைச்சு மூலம் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது செயலிழந்துள்ளது என கூறினார்.

நீதி அமைச்சோடு  கலந்துரையாடல்களை துரிதப்படுத்தி சட்ட மூலத்தை  திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு  பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *