இலங்கைக்கு ஆப்பு வைத்த சீனா!

சீன உர நிறுவனமான சீவின் பயோடெக் சர்ச்சைக்குரிய கரிம உர ஏற்றுமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது ஆர்டர் செய்யப்பட்ட கரிம உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை வழங்கவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், சீன நிறுவனம், இலங்கையின் ஆர்கானிக் உரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

உர ஏற்றுமதி தொடர்பாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு சீன நிறுவனத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப் பெறுவது அல்லது செலுத்தப்பட்ட தொகையை அனுமதிக்க இரசாயன உரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நான் ஆராய்ந்தேன். இருப்பினும், இரண்டு கோரிக்கைகளுக்கும் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆர்கானிக் உரத்தை முதலில் ஆர்டர் செய்தபடியே பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பணம் மற்றும் உரம் இரண்டையும் இழக்கும் அபாயம் உள்ளது,” என்றார்.

இலங்கையில் கரிம உரங்களுக்கான தரநிலைகள் இல்லை எனவும், கரிம உரத்திற்கு தேவையான தரங்களை தயாரிக்குமாறு இலங்கை தரநிலை நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

“இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் (NPQS) நிர்ணயித்த தரங்களுக்கு இணையாக கரிம உரங்களை வழங்க முடியாது என்று சீன நிறுவனம் கூறியது,” என்று அவர் கூறினார்.

மேற்படி ஏற்றுமதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர், மேலதிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக அமைச்சு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *