திருமலையில் காணி பிரச்சினை: இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி- இம்ரான் குற்றச்சாட்டு!

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் காணிப்பிரச்சினை என்பது மிகவும் மோசமான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் இன்று இந்த காணி விடயங்களால் இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூதுார் பிரதேச செயலக பிரிவில் தோப்பூர் உல்லைக்குளம் கிராமத்தில் 576 ஏக்கர் காணியில் குறிப்பாக 96 தமிழ், 110 முஸ்லிம் விவசாயிகளும் விவசாயம் செய்வதாகவும் அதில் சிலருக்கு 1930 ம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் காணி அனுமதி பத்திரமும், ஏனைய சிலருக்கு 1976-1980 ம் ஆண்டு காலப்பகுதியிலும் ஆட்சி உறுதி வழங்கப்பட்டிருப்பதாகவும், யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் அந்த பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் முஸ்லிம்கள் விவசாய நடடிக்கையில் ஈடுபடாமல் இருந்ததாகவும், 2009 க்கு பிற்பாடு தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையாக விவசாய நடடிக்கையில் ஈடுபடும் பகுதியாக உல்லைக்குளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் தற்போது அரசியல் பின்புலங்களை கொண்ட சிலரின் உதவியுடன் அரச காணிகளை தனியாருக்கு பணத்திற்கு வழக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்ற ஒரு கூட்டம் காணிக்கு பொறுப்பான அதிகாரிகளை இணைத்துக்கொண்டு  காணிப்பிரச்சினைகளை  உருவாக்குவதாகவும், அண்மையில் மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் காணிகளை பொலிஸ், இராணுவத்தை வரவழைத்து அளவிட உத்தரவிட்டதாகவும் அத்துமீறுபவர்களை கைது செய்யப்படுவீர்கள் என்பதாக காணி அதிகாரிகள் தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மக்கள் உண்பதற்கு கூட வழியில்லாமல் பொருளாதார சிக்கலில் இருக்கின்ற நிலையில் காணி பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அரசாங்கத்தை எச்சரித்த அவர் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் கணிப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply