
கோவிட்-19 வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இன்று (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய திருமணங்களின் போது மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் என்ற ரீதியில் ஆகக்கூடியது 200 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, பரந்த வெளிகளில் இடம்பெறும் திருமணங்களுக்கு 250 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு திரையரங்குகளில் ஆசன எண்ணிக்கையில் 75 சதவீதமானோருக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மண்டபங்களின் நடத்தப்படும் ஏனைய வைபவங்களுக்கு அதிகபட்சம் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, பரந்த வெளிகளில் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் ஒரே நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே உட்செல்ல முடியும்.
சிகை அலங்கார நிலையங்களுக்கு முன் அனுமதி பெற்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு செல்ல வேண்டும். பொருளாதார மத்திய நிலையங்கள், வாராந்த சந்தைகள் நடமாடும் வியாபாரிகள் உரிய வழிகாட்டல்களைப் பின்பற்றி அதன்படி செயற்பட வேண்டும்.
மத வழிபாட்டு ஸ்தலங்களில் பக்தர்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். சம்மேளனங்களை நடத்தும் போது சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதோடு இவற்றுக்கு அதிகபட்சம் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் மேலதிக வகுப்புக்களை நடத்த முடியும். இதன்போது 50 சதவீதமானோர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். இவை தவிர தொழிற்சாலைகளிலும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






