
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டக்கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகளை தொடர சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) நாடாளுமன்றில் நேற்றைய தினம், கல்வி அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகமொன்றில் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கல்வித் தகமையை அதிகரித்துக் கொள்ள இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
1970களில் நாடாளுமன்றில் அங்கம் வகித்த சில உறுப்பினர்களுக்கு சட்டக்கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டது எனவும், குறித்த நாடாளுமன்ற உறப்பினர்கள் நுழைவுத்தேர்வு இன்றி சட்டக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சேம் விஜேசிங்கவினால் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் தற்போதைய பிரதமரும், அந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவும் (Mahinda Rajapaksa) சட்டக்கல்லூரியில் கற்க சந்தர்ப்பம் கிடைத்தது என அவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.






