மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுகிறது – தேசிய பேரவையின் துணைக்குழு

நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள நிலையில், அந்த நிலைமையை களைவதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தற்போதைய நிலைவரத்தை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 300 ஆசிரியர்களைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல குறித்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply