
கடற்றொழில் அமைச்சர் சொல்லலாம் ஆனால் கடற்றொழில் அதிகாரிகளுக்கு எங்கு போனது மதி என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம், நாரா நெக்டா நிறுவனம் வடக்கில் காலூன்றிய பின்னர் வடபகுதி பகுதி கட்ற்றொழிலாளர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்கின்றனர் என்றார்.
கிளிநொச்சி மாவட்ட அரசியல்வாதிகள் கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி உரிய தீர்வுக்கு வழி செய்ய வேண்டும். கிராஞ்சியில் இரவிரவாக கடலட்டை பண்ணைகள் அளக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் சமாசங்கங்கள் என்பன இவ்விடயத்தில் மௌனமாக உள்ளன என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
மேலும், தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சர் சொல்லும் இடத்தில் கடலட்டை பண்ணை போடலாமா இல்லையா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லையா என்ற கேள்வியெழுகிறது.
கடலட்டை பண்ணையை வழங்கவேண்டாமெனக் நாம் கூறவில்லை. அதனை முதலாளி வர்க்கத்திற்கு வழங்காமல் சாதாரண கடற்றொழிலாளர்களுக்கு வழங்குங்கள். கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை.வளங்களை அதிகரிக்க வேண்டிய நாரா நெக்டா நிறுவனமே வளங்களை அழிக்கின்றது. கடற்றொழில் அமைச்சர் கூறிய விடயங்களே நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடற்றொழில், மக்களின் எதிர்ப்புக்களை மீறி கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகிறது. இது ஏன்? கடலட்டை பண்ணைகளை மட்டுப்படுத்தி வழங்குங்கள். மக்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் கடலட்டை பண்ணை அமைத்தால் மக்கள் எங்கு தொழில் செய்வது என்றார்.