ஒற்றையாட்சி முறைமையை தமிழ் மக்கள் பேயை போன்று சமஸ்டி ஆட்சி முறைமையை சிங்கள மக்கள் பிசாசை போன்று கருதுவதாலேயே இந்த முரண்பாடுகள் எற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரை வரவேற்கத்தக்கது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், முன்வைத்த கொள்கை திட்டத்தை முழுமையாக பின்பற்றினால் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட பொறிமுறைகள் கொள்கைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சியா அல்லது சமஸ்டியாட்சியா என்பது தற்போதைய பிரச்சினையல்ல, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தற்போதைய பிரதான இலக்காக கருதவேண்டும்.
இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இணக்கப்பாட்டுடனான பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வை சாத்தியமாக்க முடியும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.