
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென கிழக்குப் பல்கலைகழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைகழக மாணவியிடம் விரிவுரையாளர் பாலியல் இலஞ்சம் கேட்டதாக குறிப்பிட்டு, விரிவுரையாளருக்கும் மாணவிக்குமிடையிலான தொலைபேசி பதிவும் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் கிழக்குப் பல்கலைகழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரிய விடயம் வன்மையாகக் கண்டிக்கின்றது, பெரிதும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவி தனது பல்கலைக்கழக கற்கையை இடைநிறுத்தும் நோக்கோடு பல்கலைக்கழக விடுதியில் இருந்தும் வெளியேறியுள்ளதுடன் இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கும் அறியப்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உறுதிப்படுத்தும் படியாக விரிவுரையாளர் மாணவியோடு பேசிய குரல் பதிவுகள் சம்பவம் தொடர்பான முக்கியமான ஆதாரங்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதும் அவை வெளிவருவதென்பது அரிதாகவே உள்ளது.
அவ்வாறு வெளிவருகின்ற போதும் போதிய ஆதாரங்கள் இன்மையின் காரணமாக உரிய முறையில் நீதியினைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் தப்பித்துக் கொண்டே உள்ளதோடு அச்சமின்றியும் செயற்படுகின்றனர்.
இந்நிலைமை தொடர்வதனால் பெண் பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்ப பெற்றோர்கள் விருப்பப்படாததோடு பிள்ளைகளும் அச்சம் கொள்கின்றனர் இதனால் பெண்களின் பல்கலைக்கழக கல்விக்கான பாரிய சவாலான நிலமை காணப்படுகின்றது.
இவ்வாறாக பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், இனிவரும் காலங்களில் இவ்வாறான முறையற்ற செயற்பாடு நடைபெறாத வண்ணம் இறுக்கமான வழிமுறைகள் பல்கலைக்கழகங்களில் பின்பற்றவும், குறித்த மாணவிக்கு நடந்த அநீதிக்கான உடனடித் தீர்வினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கிழக்குப் பல்கலைகழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியமானது வன்மையாகக் கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி
சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

