இலங்கையில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் பசில் ராஜபக்சவால் ஆபத்து! அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்

பசில் ராஜபக்சவுடனான அரசியலினால் நாடு தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த நாட்டில் பிறந்து, பிறக்கப்போகும் பிள்ளைகள் கூட  பாதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியவர் பசில் ராஜபக்சவே என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை சீகிரிய பிரதேசத்தில் அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு லக்ஷ்மன் வசந்த பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்சவுடனான அரசியலினால் நாடு தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.இப்போது அவர் பசில் ராஜபக்சவுக்கு பதிலாக பசில் விக்கிரமசிங்க என்று அழைக்கப்படுகின்றார்.

பசில் ராஜபக்சவை அழித்தவர் மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அவர்களின் அரசியலினால்  பிறந்து,பிறக்கப்போகும் பிள்ளைகள் கூட பாதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சுற்றி மக்கள் அணி திரள்வதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சி என்பது அரச சொத்துக்களை எரித்து அழிக்கும் குழுவல்ல, வெற்றி தோல்வியுடன் ஜனநாயக ரீதியில் மக்களுக்கு சேவையாற்றும் கட்சி.

முன்னாள் ஜனாதிபதியுடன் நெருங்கிப் பழகிய சஜின் தே வாஸ் மொட்டுக்கட்சியின் கதி என்னவென்பதை அறிந்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச குளிக்கும் இடங்களுக்குச் சென்று பேசும் அளவிற்கு நெருங்கிய தொடர்பில் இருந்த மொட்டுக்கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், அனுர யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம தம்மை அழைத்தார்.இருப்பினும் மொட்டின் தலைவிதியை தான் உணர்ந்தமையினால் அங்கு வரமுடியாது என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply